பண மதிப்பிழப்பு உத்தரவால் பாதிக்கப்பட்டது மக்கள்.. பலனடைந்தது கருப்பு பண முதலைகள்.. அம்பலமான உண்மை
டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. ரிசர்வ் வங்கி இதுவரை தங்களிடம் வநத் பணத்திற்கான கணக்கு காட்டாமல் இருப்பதே இதை உறுதி செய்யும் வகையில்தான் உள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு என்ற பெயரில் அப்போது நடைமுறையில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்வதாக அறிவித்தார்.
மோடியின் இந்த அறிவிப்பால் மக்கள் அல்லோகலப்பட்டனர். பணத்தை மாற்றுவதற்கு வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களிடமிருந்த பணத்தை மாற்றினர். முதியவர்கள் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவங்கள் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்கள் கஷ்டம்
இப்படிப்பட்ட நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்பதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள்களைவிடுத்தது. இதனால் மக்களும் படும் கஷ்டங்களுக்கு நடுவே தேச நலன் என்ற வார்த்தைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றினர்.

அடேங்கப்பா அறிவிப்பு
இந்த நிலையில், டிசம்பர் 10ம் தேதியில் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது மொத்த பண மதிப்பிழப்பில் 81 சதவீத நோட்டுக்கள் தங்களுக்கு திரும்பிவந்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.12.44 லட்சம் கோடி எனவும் அது கூறியது. அதாவது மோடி அறிவித்த சுமார் 32 நாட்களில் 81 சதவீத பணம் திரும்ப வந்துவிட்டது என கூறியது ஆர்.பி.ஐ.

கணக்கு எங்கே?
ஆனால், ஆர்.பி.ஐ இதுவரை தங்களிடம் திரும்ப வந்த முழு பணத்தின் மதிப்பை அறிவிக்கவில்லை. ஒரு மாதத்தில் 81 சதவீத பணம் வந்துவிட்டதாக கூறிய ஆர்.பி.ஐ 200 நாட்கள் கழித்த பிறகும், எஞ்சிய 19 சதவீத பணத்தின் மதிப்பை கூட்டி மொத்தமாக சொல்லவில்லை. நாடாளுமன்ற குழுவிடமும் ஆர்.பி.ஐ இப்படித்தான் பதில் கூறியுள்ளது.

துன்பியல் நகைச்சுவை
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதில் திருப்திகரமாக இல்லை. கடந்த 7 மாதங்களாகவே பணத்தை எண்ணுகிறோம் என்றுதான் கூறிவருகிறார் அவர். பணத்தை எண்ண புது மிஷின்கள் வாங்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால், மக்களை கஷ்டப்படுத்திய மாபெரும் ஒரு நிகழ்வின் ரிசல்ட் என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது பெரும் துன்பியல் நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும்.

கருப்பு பணம் புகுந்துவிட்டது
இதன் அர்த்தம், பணமதிப்பிழப்பு நேரத்தில் எவ்வளவுதான் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், கருப்பு பணம் புழக்கத்தில் வந்துகொண்டுதான் உள்ளது என்பதுதான். வாடிக்கையாளர் அடையாள அட்டைகளை எல்லாம் பரிசோதித்துதான் பணத்தை பெற்றன வங்கிகள். இந்த பணம் எப்படி வந்தது என்றெல்லாம் கேட்டனர். ஆனால் கருப்பு பண முதலைகள் வங்கி அதிகாரிகள் துணையோடு வங்கிக்கு பழைய கருப்பு பணத்தை கொடுத்துவிட்டு, புதிய நோட்டுக்களை பெற்றுள்ளனர். எனவேதான், ரிசர்வ் வங்கிக்கு அதிக அளவு நோட்டுக்கள் வந்து சேர்ந்துள்ளன. எனவே இதுவரை எண்ணி முடிக்க முடியவில்லை.

அடுத்த மாதம் பார்ப்போம்
ஆர்.பி.ஐ இப்பணத்தை எண்ணுவதற்கு இயலாமல் இருக்கிறது. குத்துமதிப்பாகத்தான் தாங்கள் அச்சடித்த பணத்தை வைத்து ஒரு தொகையை முன்பு கூறியிருக்க வேண்டும். இப்போது கருப்பு பணம் உள்ளே வந்துவிட்டதை உணர்ந்துகொண்டு, அதை சொல்லவும் முடியாமல் விழித்துக்கொண்டுள்ளது ஆர்.பி.ஐ. வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு கணக்கை ஆர்.பி.ஐ வெளியிடுவது வழக்கம். அப்போதாவது உண்மை வருகிறதா, அல்லது ஏதாவது காரணம் சொல்லப்போகிறதா என்பதை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications