மோடிக்கு நான் தேவையில்லை: ராகுலுக்காக பிரச்சாரம் செய்ய ரெடி- சல்மான் கான்
மும்பை: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்காக எப்பொழுது வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்ய தயார் என்று இந்தி நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் சல்மான் கான் அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டார். மோடியை சிறந்த மனிதர் என்று பாராட்டிய சல்மான் அவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க மறுத்துவிட்டார்.
குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று சல்மான் தெரிவித்து பலரின் கண்டனத்திற்கும் ஆளானார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கூறுகையில்,
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் சமமானது. அனைத்துக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. அரசியல்வாதிகள் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். அரசியல் தலைவராக ராகுல் காந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுது தேவைப்பட்டாலும் அவருக்காக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன். குஜராத்தில் மோடிக்கு நான் தேவையில்லை. அவர் மிகவும் பிரபலம். குஜராத்தில் மோடிக்கு இருக்கும் ஆதரவை நான் பார்த்தேன். அதனால் அவருக்கு நான் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை.
ராகுல் மட்டும் என்னை அழைத்தால் நான் நிச்சயம் அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்றார்.