நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் எந்தத் திருத்தம் வேண்டுமானாலும் செய்யத் தயார்- மோடி
டெல்லி: சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் அளித்து, 70 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அவர், நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா பற்றி விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், "நாங்கள் செய்ததை விட யாரும் சிறப்பாக செய்து விட முடியாது என்ற அகந்தை எங்களுக்கு இல்லை. நீங்கள் (காங்கிரஸ் கூட்டணி அரசு) நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை (2013) நிறைவேற்றியபோது, நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நின்றோம். அதில் நீங்கள் அரசியல் லாபம் அடைய விரும்பியதை நாங்கள் அறிவோம். இன்னும் உங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய விரும்பினோம். ஏனென்றால், அந்த சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது, வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கும் இடையூறாக அமைந்து விடும் என எல்லா முதல்வர்களும் கூறினர்.
நாங்கள் அரசு அமைத்தபோது, ‘தயவு செய்து விவசாயிகளைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் நீர்ப்பாசன வசதி, அடிப்படை கட்டுமான வசதி வேண்டும் என்று விரும்புகிறார்கள்' என அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முதல்வர்கள் ஒரே குரலில் கூறினார்கள். அப்படி விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்.
விவசாயிகளின் நலன்களை நாங்கள் புறக்கணிக்க முடியுமா? தவறு ஏதாவது இருந்தால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு இல்லையா? நீங்கள் என்ன செய்திருந்தாலும், நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. இதை அரசியல்ரீதியாக எடை போட்டுப் பார்க்காதீர்கள்.
இந்த சட்ட மசோதா விவசாயிகளின் நலன்களுக்கானது.
அதில் ஏதேனும் குறைகள் இருப்பதாக நீங்கள் இன்னும் கருதினால், எந்த திருத்தங்களை செய்வதற்கும் நான் தயார். இதை நீங்கள் கவுரவப் பிரச்சினையாக பார்க்காதீர்கள். இந்த சட்டத்தில் உள்ள தவறுகளைச் சரி செய்வதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று உழைக்க வேண்டும்," என்றார்.ஞ
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், தொழிலதிபர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான திருத்தங்களைக் கொண்டு வந்ததே மோடி அரசுதான். அந்த திருத்தங்களை ரத்து செய்தாலே, இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications