நடு ரோட்டில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை வழிமறித்த 'தமிழக போலீசார்'! வாக்குவாதத்தால் பரபரப்பு
Recommended Video

மைசூர்: டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளனர்.
நேற்று காலையில் இந்த எம்எல்ஏக்கள் 18 பேரும் 2 வேன்களில் தலைக்காவிரிக்கு புறப்பட்டுச்சென்று காவிரி உற்பத்தியாகும் இடத்தில் புனித நீராடிவிட்டு வழிபாடு நடத்தினர். இதன்பிறகு அப்பகுதியில் புகழ்பெற்ற அப்பி நீர்வீழ்ச்சிக்கு சென்ற எம்எல்ஏக்கள் பின்னர் அங்கிருந்து வேன்களில் புறப்பட்டு மாவட்ட தலைநகர் மடிகேரி சென்றனர்.
மடிகேரியில் சில இடங்களை சுற்றிப்பார்த்து குஷியடைந்த அவர்கள் மாலையில் அங்கிருந்து மீண்டும் தங்கள் வேன்களில் விடுதிக்கு புறப்பட்டனர். அந்த வேன் மடிகேரி புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கர்நாடக பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் நடுரோட்டில் வழிமறித்தன.

வழிமறித்த போலீசார்
அந்த வாகனங்களில் இருந்து இறங்கிவந்த சிலர் எம்எல்ஏக்கள் 2 வேன்களிலும் சோதனை நடத்தினர். தங்களை போலீசார் என அறிமுகம் செய்த அவர்கள் வேனுக்கான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறினர். பின்னர் அந்த வாகனங்களில் வந்த சிலர் மீண்டும் எம்எல்ஏக்கள் இருவரை மட்டும் தனியாக அழைத்து , உங்களை கண்காணிக்கவே நாங்கள் இங்கு வந்தோம் என்றும் கூறியதாக தெரிகிறது.

மிரட்டியதாக குற்றச்சாட்டு
மேலும் நீங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும், அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நீங்கள் இங்கு தங்கி இருந்தால் அதற்கான விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

வாக்குவாதம்
இதனால் எம்எல்ஏக்கள் 2 பேரும், தமிழக போலீசார் என்று கூறிய நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வேனில் இருந்த சில எம்எல்ஏக்கள் அங்கு நடந்த சம்பவங்களை தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுக்க முயன்றனர். இதையடுத்து தமிழக போலீசார் என்று கூறிக்கொண்டு வந்த அந்த நபர்கள் தாங்கள் வந்த வாகனங்களிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர்.

போலீசில் புகார்
இதனிடையே, நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பிற எம்எல்ஏக்கள் மீண்டும் மடிகேரிக்கே திரும்பி வந்து குடகு மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதுபற்றி விசாரணை நடத்துவதாக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications