சச்சின் ஓய்வு பெற கெடு விதிக்கவில்லை - சந்தீப் பாட்டீல் மறுப்பு
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தனது 200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்த முடிவை எடுக்குமாறு நான் சச்சின் டெண்டுல்கருக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் உண்மை இல்லை, அடிப்படை இல்லை.
ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நான் சச்சினுடன் பேசவே இல்லை. எனவே அவரை ஓய்வு பெறுமாறு நான் நிர்ப்பந்திக்கவோ, கெடு விதிக்கவோ அவசியமே எழவில்லை.
மேலும் சச்சின் ஓய்வு குறித்து நான் அவருடன் விவாதிக்கவும் இல்லை, பேசவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் முன்னதாக வெளியான செய்திகளில், 200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்றும், அவரது பார்ம்தான் இனிமேல் கணக்கில் கொள்ளப்படும் என்றும், கடந்த கால சாதனைகள் பரிசீலிக்கப்படாது என்றும் சந்தீப் பாட்டீல் கூறியதாக வெளியாகியிருந்தன. மேலும் சச்சின் குறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுடனும் பாட்டீல் பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இவை அனைத்தையும் பாட்டீல் மறுத்துள்ளார்.