சட்டம் ஒழுங்கு பாதிப்பதால் ஜெ. வழக்கை தமிழகத்துக்கு மாற்றுக: கர்நாடக ஹைகோர்ட்டில் கோரிக்கை தாக்கல்
பெங்களூர்: ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும், அடுத்தகட்ட விசாரணை அங்கே நடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் சட்ட பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறை தண்டனை அளித்த பிறகு அதிமுக தொண்டர்கள் பலரும் பெங்களூரில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக சட்ட பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவி பார்வதி ரெட்டி, இன்று கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி ரெட்டி அளித்த பேட்டி:
ஜெயலலிதா வழக்கு விசாரணை காரணமாக கர்நாடக ஹைகோர்ட்டில் மூச்சு முட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுகவினர் வந்து குவிவதால் வழக்கமான கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வக்கீல்கள், மனுதாரர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளது.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறை, மற்றும் ஹைகோர்ட் வளாகத்திலும் அதிமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டம் யாருக்கு எதிராக? நீதிபதிக்கு எதிராகவா அல்லது நீதிமன்றத்துக்கு எதிராகவா? யாருக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை சொல்ல முடியுமா?
கர்நாடக மாநில வக்கீல்கள் இதுவரை எந்த வழக்கிலாவது போராட்டம் நடத்தியுள்ளனரா? அதிமுகவினர் யார் இங்கு வந்து போராட? எனவே பெங்களூரில் ஜெயலலிதாவை வைத்திருக்கும் அவசியம் நமக்கு இல்லை. கர்நாடகாவில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதிமுகவினர் சும்மா இருந்தால் பரவாயில்லை. போராட்டம் நடத்துவதால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது.
பெங்களூரில் வந்து அதிமுகவினர் மொட்டை அடித்து போராட்டம் நடத்துகிறார்கள். இது நமது மாநிலத்துக்கு நல்லதல்ல. கர்நாடகாவில் இதற்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் சிறையில் இருந்தனர். ஆனால் எந்த போராட்டமும் நடக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. கர்நாடகாவில்தான் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. காவிரியால் ஏற்கனவே தமிழர், கன்னடர் பிரச்சினை ஏற்பட்டது. ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் அதிமுகவினர் அமைதியை கெடுப்பார்கள் என்று சந்தேகம் உள்ளது. எனவே ஜெயலலிதாவை தமிழகத்துக்கு மாற்றுங்கள், வழக்கையும் தமிழகத்துக்கு மாற்றுங்கள் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம்.
நீதிபதியிடம் கலந்தாலோசிப்பதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பார்வதி ரெட்டி கூறினார்.












Click it and Unblock the Notifications