காஷ்மீரின் அமைதியான பகுதியில் அலறல்.. மசூதியில் ஓய்வுபெற்ற எஸ்பியை கொன்று பயங்கரவாதிகள் வெறிச்செயல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையே நடக்காத மிகவும் அமைதியான பகுதியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியை மசூதியில் வைத்தே பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியை அடுத்து அமைந்து இருக்கிறது காண்ட்முல்லா பகுதி. துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு சத்தங்களும் நிறைந்த ஜம்மு காஷ்மீரிலேயே மிகவும் அமைதியான பகுதி என்று இது அழைக்கப்படுகிறது. கடந்த பல 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் எந்த விதமாக வன்முறை சம்பவங்களும், பயங்கரவாதிகள் ஊடுருவலும் நடைபெற்றது இல்லை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அமைதியான பகுதியில் இன்று ஒரு அதிர்ச்சிகர தாக்குதல் நடைபெற்று உள்ளது.

இந்த பகுதியில் ஓய்வுபெற்ற மூத்த காவல் கண்காணிப்பாளர் முஹம்மது ஷாபி மிர் என்பவர் வசித்து வந்து இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு இன்று அதிகாலை தொழுகைக்கான சென்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மசூதி என்றும் பார்க்காமல் அதற்கு உள்ளேயே வைத்து அவரை கொடூரமாக சுட்டுக் கொலை செய்து இருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து காவல் துறை தெரிவித்து உள்ளதாவது, "ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் முஹம்மது ஷாபி மிர் ஷீரியில் உள்ள உரியை அடுத்த காண்ட்முல்லா கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இந்த பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் வன்முறை மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் ஏற்படவில்லை. பயங்கரவாதிகள் காண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான முஹம்மது ஷபி மீது தாக்குதல் நடத்தினர். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்." என்று விளக்கி உள்ளது..
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஷபி மிர் 2012 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.பியாக இருந்து ஓய்வுபெற்று உள்ளார். இவர் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகவும் அமைதியான பகுதிகளில் ஒன்றில் வசித்து வந்திருந்தாலும் அவருக்கு என தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருந்தார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அண்மையில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி திரும்பப்பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை பயங்கரவாத தாக்குதல் நடந்த உடனே, ஜம்மு - காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவத்தின் கூட்டு குழு, எஸ்.எஸ்.ஐ. முஹம்மது ஷாபியை கொலை செய்த பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தை சூழ்ந்து இருக்கிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications