வாகா எல்லையில் இந்திய வீரர்களின் அதிரடி அணிவகுப்பு! வந்தேமாதரம் கோஷத்துடன் மக்கள் கண்டுகளிப்பு
அமிர்தசரஸ்: குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இன்று கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்முறையாக ராணுவ பிரிவை சேர்ந்த பெண் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்பின் அமிர்தரசரஸ் அருகே அமைந்துள்ளது வாகா பகுதி. இங்கு மாலையில் இரு நாட்டு தேசிய கொடிகளும் இறக்கி வைக்கப்படும்போது, சல்யூட் அணிவகுப்பு நடைபெறும்.
இந்தியாவின் 66வது குடியரசு தினமான இன்று, எல்லையிலுள்ள பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு, இந்திய வீரர்கள் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாலையில், கொடியிறக்கம் கோலாகலமாக நடந்தது.
முதல் முறையாக பெண் ராணுவ அதிகாரிகளும் அப்போது அணிவகுப்பு செய்தனர். நூற்றுக்கணக்கான இந்திய பொதுமக்கள், இதை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். கால்களை தோள் உயரத்திற்கு தூக்கி கீழே அடிக்கும் இந்த சல்யூட் நிகழ்ச்சியை நேரில் பார்த்த மக்கள் 'வந்தேமாதரம்' என்று கூறி கரகோசங்களை எழுப்பினர்.