"நாங்க பிராடு தான்.. ஆனா தேசபக்தி அதிகம்.." குஜராத்தில் தீவிரவாதியை சிறையிலேயே தாக்கிய சக கைதிகள்
அகமதாபாத்: இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்ட காதர் ஜிலானி என்பவர் குஜராத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அங்குச் சிறையில் இருந்த சில சக கைதிகள் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாகத் தீவிரவாதியைத் தாக்கியதாக அவர்கள் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட தீவிரவாதிகளை நோட்டமிட்டு அவர்களைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்து வருகிறார்கள். சமீபத்திய வாரங்களில் அதுபோல பலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அப்படி இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த முயன்றதாகச் சொல்லி கைது செய்யப்பட்டவர் சையத் அகமது மொஹியுதீன் அப்துல் காதர் ஜிலானி.

தாக்குதல்
40 வயதான இவர், ரிசின் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சொல்லிக் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அவரை கைது செய்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி அவர் குஜராத்தில் இருக்கும் சபர்மதி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை திடீரென 3 கைதிகள் மிக மோசமாகத் தாக்கியுள்ளனர்.
ஜிலானியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கச் சமீபத்தில் தான் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர் சபர்மதி சிறைக்கு மாற்றப்பட்ட மறுநாளே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சபர்மதி சிறையில் அவரை சக கைதிகள் தாக்கியுள்ளனர். நிர்மல் குமார் என்ற கைதியும் அவருடன் மற்ற இருவரும் இணைந்து ஜிலானியை தாக்கியுள்ளனர். ஜிலானியின் கண்களிலும், மூக்கிலும் குத்தியதில் அவருக்கு முகத்தில் மிக மோசமான காயம் ஏற்பட்டதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசபக்தி
அந்தக் கைதிகள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் ஜிலானியைத் தாக்கியதாகச் சொன்னதாக மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடந்தபோது அதிகாரிகள் யாரும் அருகே இல்லையாம். இருப்பினும், மற்ற கைதிகள் விரைவாகத் தலையிட்டுத் தாக்குதலை நிறுத்தினர். இதனால் ஜிலானி உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. இதையடுத்து ஜிலானி சிறை மருந்தகத்திலேயே சிகிச்சை பெற்றார்.
இந்தச் சம்பவம் சிறையில் நிலவும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாகச் சிறை அதிகாரிகள் கூறுகையில், "அங்கு அத்தனை கைதிகள் இருக்கும்போது ஜிலானியை அவர்கள் எப்படி அடையாளம் கண்டனர்? ஜிலானியை அடையாளம் காண அவர்களுக்கு உதவியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
விசாரணை
இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா.. இல்லை ஒரு சிறு மோதலால் நடந்ததா என்பது குறித்தும் சிறை அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இத்தாக்குதலில் மூன்று பேர் ஈடுபட்டது உறுதியான நிலையில், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. ஜிலானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் நிர்மல் குமாருடன் இருந்த சக கைதிகள் யார் என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த ஜிலானி
கடந்த வாரம் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் ஜிலானியை கைது செய்தனர்.. இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படும் ஆபத்தான 'ரிசின்' மூலம் தாக்குதல் நடத்தச் சதி செய்ததாகச் சொல்லி, ஜிலானியுடன் சேர்ந்து மொத்தம் 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் செயல்பாடுகளைப் பல மாதங்கள் கண்காணித்து வந்த பிறகே இவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications