பீகாரில் அரசியல் பெரும் திருப்பம்: ராஷ்டிரிய ஜனதா தளமும் ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைகின்றன!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலை முன்வைத்து லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைய முடிவு செய்துள்ளன.
பீகார் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பது ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வியூகம்.
ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த உடனேயே இரு கட்சிகளும் பகையை மறந்து நட்பு சக்திகளாகிவிட்டன. அண்மையில் ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

இது பாஜக அல்லாத கட்சிகளை அதிர்ச்சிய அடையச் செய்துள்ளது. இதனால் கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், முலாயம்சிங் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டு வருகின்றனர்.
இதில் அடுத்த கட்ட திருப்பமாக ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு லாலு பிரசாத் மற்றும் நிதிஷ்குமார், சரத் யாதவ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வந்துவிடும் என்பதால் ஒரே கட்சியாக ஒரே சின்னத்தில் போட்டியிடுவது என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications