ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜூனில் நடைபெறும்?
தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறக் கூடும் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.
டெல்லி: பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெற கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் பல நூறு கோடி ரூபாய் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ89 கோடி லஞ்சம் கொடுத்த ஆவணம் சிக்கியது. இது தொடர்பான வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

தேர்தல் ரத்து
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதியுடன் நேற்று முழுவதும் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிகாலையில் ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதிர்வலைகள்...
ஆர்கே நகர் தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற இருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக தேர்தலையே ரத்து செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

29 பக்க அறிக்கை
ஆர்கே நகர் தேர்தல் ரத்து தொடர்பாக 29 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா நடைபெற்றது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

ஜூனில் தேர்தல்?
இதனிடையே ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 4 அல்லது ஜூன் 6-ந் தேதி நடைபெறக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போதும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளக் கூடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications