முதல்வர், அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை - மும்பையில் ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் திமுகவினர் மனு
முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மும்பை ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து திமுகவினர் மனு அளித்தனர்.
மும்பை : வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானதால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சிபிஐ விசாரணை கோரியும், பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல்வர், அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யக் கோரியும் திமுக முக்கிய தலைவர்கள் இன்று மும்பை சென்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ரவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் இன்று நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒட்டுமொத்தமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்து ஆர்.கே.நகரில் இன்று திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பணப்பட்டுவாடா புகார்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திமுகவினர் மனு
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மும்பை புறப்பட்டுச் சென்றனர்.
ஆளுநருடன் சந்திப்பு
வருமானவரித் துறை கைப்பற்றிய ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிக்கை அடங்கிய மனுவுடன் மும்பை ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
ஆளுநரிடம் கோரிக்கை
இந்தச் சந்திப்பின்போது, பணப்பட்டுவாடா புகாருக்குள்ளான அமைச்சர்களை பதவி நீக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.