10 நாள் லீவுன்னு தெரியாதா குன்ஹா???.... ஜெ.வுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் அத்வாலே!
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்ற அளித்த தண்டனையும், தீர்ப்பும் மனித உரிமை மீறலாகும் என்று கூறி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, ஜெயலலிதாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கவும், மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தி நியாயம் கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுக் கட்சியின் ராமதாஸ் அத்வாலே பிரிவு சார்பில் அதன் தேசிய துணைத்தலைவர் அபித் பக்ஷக் ஹுசேன் நேற்று டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது...
10 நாள் லீவுன்னு தெரியாதா....!
தீர்ப்பு வழங்கியதில் ஆரம்பக்கட்டத்திலேயே மனித உரிமை மீறல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஜாமீன் கோரவோ அல்லது மேல்முறையீடு தாக்கல் செய்யவோ, உயர்நிலை நீதிமன்றங்களை அணுகாதவாறு தடுக்கும் வகையில், 10 நாட்கள் தொடர் விடுமுறை தினங்கள் என்பது நன்றாக தெரிந்திருந்தும், தீர்ப்பு வழங்குவதற்கு நேற்று முன்தினத்தை, அதாவது சனிக்கிழமையை நீதிமன்றம் தேர்ந்தெடுத்தது சரியல்ல.
கோர்ட் மன்னிப்பு கேட்க வேண்டும்
இது வழக்காடுபவருக்கு எதிராக நீதிமன்றங்கள், மனித உரிமையை மீறும் குற்றச்செயலாகும். இதற்காக, இந்திய நீதிமன்றங்கள், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, தீர்ப்பு வழங்கும் நாளை அடுத்து, தொடர்ந்து விடுமுறை வருமானால், அன்றைய தினம் தீர்ப்பு வழங்கக்கூடாது.
புறக்கணிக்கக் கூடாது
விடுமுறைக்காலம் என்ற பெயரில் வழக்காடுபவர்களின் உரிமைகளை நீதிமன்றங்கள் புறக்கணிக்கக்கூடாது. பெங்களூரு உயர்நீதிமன்றம் உடனடியாக ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக சிறப்பு அமர்வை ஏற்படுத்தவேண்டும்.
ஏன் ஒரு வருட தண்டனை தரவில்லை
இந்த வழக்கில், குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்ட ஷரத்து வகை செய்தபோதிலும், குறைந்தபட்ச தண்டனையான 1 வருடத்தை தேர்ந்தெடுக்க நீதிபதி தவறிவிட்டார். நீதிமன்றம் தானாக விரும்பி எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. 3 வருடங்களுக்கு குறைவான அல்லது 1 வருட குறைந்தபட்ச தண்டனை என்பதை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான காரணங்களை நீதிமன்றம் விளக்கவில்லை.
பழி வாங்குறீங்களா...!
3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதித்திருப்பது பழிவாங்கும் செயலாகும். இந்திய ஆட்சியாளர்களை தண்டிப்பதற்காகவே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வகுக்கப்பட்ட சட்டத் தொகுப்பின் மாதிரியாக அமைந்துள்ள தற்போதைய சட்டஷரத்துக்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.
ரூ. 100 கோடி அபராதம் ஓவர்...!
கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதங்களை விதிக்கக்கூடாது என கீழ் நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பில் எச்சரித்துள்ளது. எனவே, 100 கோடி ரூபாய் அளவிற்கு கடுமையான அபராதம்
விதித்திருப்பது சட்டவிரோதமானது.
குடும்பம் குட்டி இல்லாத ஜெயலலிதா
பிரதான குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குடும்பமோ, குழந்தைகளோ இல்லாத நிலையில், பெருமளவு சொத்து சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதுமானது.
விரிவாக விசாரியுங்கள்
ஆகவே, இப்பிரச்னையில், மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இந்த விவகாரத்தில், விரிவான விசாரணை நடத்தி மனித உரிமைகளை நிலைநாட்டுவதோடு, நியாயம் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
18 வருட இழுவை கண்ணுக்குத் தெரியலையே.. அத்வாலேஜி!
10 நாள் விடுமுறையைப் பெரிதாக கூறும் அத்வாலே கட்சிக்கு இந்த வழக்கை 18 வருடங்களுக்கு ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்தது கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.