கருப்புப் பணத்துக்கு மத்தியில் 'சிவப்பு'ப் பணம்.... இந்திய தீவிரவாதிகளின் பங்கு ரூ.10,595 கோடியாம்!
டெல்லி: இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த பேச்சுதான் எங்கு பார்த்தாலும். வெளிநாட்டு வங்கிகளில் பலஆயிரம் கோடி கருப்புப் பணத்தை இந்தியாவின் பல்துறையைச் சேர்ந்தவர்கள் குவித்து வைத்துள்ளனர். அதேபோல தீவிரவாதிகளும் கூட இதே வங்கிகளில் தாங்கள் திரட்டிய பணத்தையும் குவித்து வைத்துள்ளனராம்.
தீவிரவாதிகள், போதைக் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் குவித்து வைத்துள்ள பணம் மட்டும் 2.4 டிரி்ல்லியன் டாலர் என்று ஒரு கணக்கு கூறுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் பங்கு மட்டும் ரூ. 10,595 கோடி என்கிறார்கள்.
ரத்தப் பணம்
பிளட் மணி எனப்படும் இந்தப் பணத்தை ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மூலமாக தீவிரவாதிகள் திரட்டுகிறார்கள். மேலும் தாவூத் இப்ராகிம் போன்றோர் கள்ள நோட்டு, விபச்சாரம், திருட்டு விசிடி உள்ளிட்டவற்றின் மூலமாக பணம் சம்பாதித்து தீவிரவாத செயல்களுக்காக சேர்த்து வருகிறார்கள்.
சம்பாதித்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முதலில் போட்டு வைக்கின்றனர். இதற்காக பல வங்கிகளில் அவர்கள் பல பெயர்களில் கணக்கு தொடங்குகின்றனர். குறிப்பாக எச்எஸ்பிசி வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம். கேட்பாரே இல்லை. யார் பணம் போடுகிறார்கள் என்பதை அது சரி பார்ப்பதே கிடையாதாம்.
அதேபோலத்தான் மேலும் பல வங்கிகளும் பணம் போடுவது யார் என்பதைக் கண்டு கொள்வதே கிடையா்து. இந்த மாதிரியான வங்கிகளில் பல தீவிரவாதிகள், கிரமினல்கள் கணக்கு வைத்து பணம் போட்டு வைத்துள்ளனர். இதை முதலில் அமெரிக்காதான் அம்பலப்படுத்தியது.
ஏஜண்டுகள்:
இதுபோன்று வங்கிகளில் பணம் போடு்ம் தீவிரவாதிகளுக்கு வங்கிக்குள்ளேயே உதவி செய்வதற்கு நிறையப் பேர் உள்ளனர். அவர்களின் உதவியோடு பாதுகாப்பான முறையில் பணத்தை போடுகிறார்களாம் தீவிரவாதிகள்.
இதற்காக பல ஏஜென்டுகளும் உள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளுக்காக பல்வேறு போலியான நிறுவனங்களின் பெயர்களில் கணக்கு தொடங்கித் தருகிறார்கள். போலியான ஆவணங்களைக் காட்டி இந்தக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இந்தக் கணக்குகளில் பி்ன்னர் தீவிரவாதிகள் பணத்தைப் போட்டு வருகிறார்கள்.
பல வருடங்களாக தொடர்ந்து இந்த கணக்குகளில் பணம் குவிந்து வருகிறதாம். கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் பரிவர்த்தனை போலவே இது நடந்து வருமாம். விசாறணை எதுவும் வரும் வரை இது தொடரும். விசாரணை வருவது போலத் தெரிந்தால் பணத்தை எடுத்து விடுவார்களாம்.
இதுபோன்ற கணக்குகள் குறித்து விசாரிக்க அரசுத் தரப்பில் முயன்றால் வங்கிகள் தரப்பில் ஒத்துழைப்பு சரியாக இருக்காது. அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் காக்கவே விரும்புகிறார்கள். இதனால்தான் இந்தியாவால் பல கணக்குகளை சரி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
வைரமார்க்கெட்:
இதேபோல வைர மார்க்கட்டிலும் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்கள் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை இந்தியாவில் வைரச் சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ளனராம்.
இது 26/11 சம்பவ விசாரணையின்போதுதான் கண்டறியப்பட்டது. இதற்கும் இடைத்தரகர்கள்தான் உதவுகின்றனர். இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் உள்ளதாம்.
இதன் மூலம் தீவிரவாதிகளின் பணம் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தபடி இருக்கும், பெருகியும் வரும். தேவைப்படும் போது இந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.