பட்ஜெட் 2018: வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அருண்ஜெட்லி... பின்னணி தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2018 - 19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
Recommended Video

டெல்லி: விவசாய வளர்ச்சி, ஏழைகளுக்கு தரமான சுகாதார வசதி ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என்று உரையாற்றினார் அருண் ஜெட்லி. இந்த ஆண்டு விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
வரும் 2019ல் நாடு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இது கவர்ச்சி பட்ஜெட்டாகவோ, சலுகை பட்ஜெட்டாகவோ இருக்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
குஜராத்தில் வாங்கிய அடியை பாஜக மறக்காத நிலையில், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை பட்ஜெட்
நாடுமுழுவதும் கடந்த பல மாதங்களாகவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்று நிர்வாண போராட்டம் கூட நடத்தினர். இதை மனதில் வைத்து, விவசாயிகள் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதே போலவே இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்வளம் கால்நடைத்துறை
கிசான் கிரெட்டி கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ. 11 லட்சம் கோடி கடன் இலக்கு
2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. மீன்வள மேம்பாடு, கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பதப்படுத்தும் தொழில்
இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு. வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் கட்டமைப்பு வசதி
விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாய பொருட்களின் விளைப்பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாசன திட்டங்களுக்கு ரூ2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருமானம்
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஜெய் ஜவான், ஜெய் கிஷான் முழக்கத்திற்குப் பின்னர்தான் மத்திய அரசின் பட்ஜெட்டில் கிராம விவசாயம் என்ற வார்த்தை அதிகமாக இடம் பிடித்தது. மோடி அரசும் 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று சபதம் எடுத்துள்ளது. இன்று பட்ஜெட் உரை வாசித்த அருண் ஜெட்லியும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications