ஆம் ஆத்மி போராட்டத்துக்கு 50 ரூபாய் கட்டண வசூலா... ?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியினர் இன்று டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆன்லைன் மூலம் ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று உகாண்டா பெண்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தியேட்டர்களுக்கு சினிமா டிக்கெட்களை ஆன்லைனில் விற்கும் ஒரு இணையதளத்தில், ஆம் ஆத்மி போராட்டத்துக்கு டிக்கெட் வாங்கலாம் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. அதில் ரூ. 50 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்திற்கான இணைப்பும் அதில் இடம் பெற்றிருந்தது.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. இதுகுறித்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பலர் விமர்சனங்களை எழுதியிருந்தனர். இதையடுத்து இந்த டிக்கெட் விற்பனைக்கும், எங்களது கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது, நாங்கள் டிக்கெட்டெல்லாம் வசூலிக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும் இந்த டிக்கெட் விற்பனை இணைப்பை உடனடியாக நீக்குமாறும் சம்பந்தப்பட்ட டிக்கெட் விற்பனை இணையதளத்தை அது கேட்டுக் கொண்டது. தங்களுக்கு எதிரான பிரசாரமாக இதை வர்ணித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த சதியில் தங்களது கட்சியினர் யாரும் விழுந்து விட வேண்டாம் என்றும் கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications