தமிழக விவசாயிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் சித்தராமையா... மேகதாது அணைக்கு ரூ. 5912 கோடி ஒதுக்கீடு!!
பெங்களூரு: தமிழக டெல்டா விவசாயிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ. 5912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
தமிழகம்-கர்நாடக எல்லையில் மேகதாதுவில் அணை ஒன்றை கட்டப் போவதாக கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, காவிரி ஆற்றின் குறுக்கில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் எந்த பயனும் இதுவரை இல்லை.
இந்நிலையில், 70வது சுதந்திர தின விழாவை கொண்டாடிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ. 5912 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மழைக் காலத்தில் கடலில் விணாகக் கலக்கும் உபரி நீரை பயன்படுத்த இந்த அணையைக் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பெங்களூரு மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்த அணை கட்டப்பட்டால் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சித்தராமையா கூறியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சித்தராமையாவின் இந்த அறிவிப்பு, தமிழக விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.