விவசாயிகளின் வாழ்வில் புது வெளிச்சம்.. இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.900 கோடி! அசத்தும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர்.
ரூ.28,760.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துணை நிலை பட்ஜெட் நேற்று உத்தரப் பிரதேச அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மின்சாரத் துறைக்கு ரூ.10,000 கோடி , 100 ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.170 கோடி, சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.4250 கோடி, பேரிடர் நிவாரணத்துக்கு ரூ.854 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு திட்டமிட்டிருக்கிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.6.90 லட்சம் கோடிக்கான வருடாந்திர பட்ஜெட்டை மாநில அரசு தாக்கல் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது துணைநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா தாக்கல் செய்தார்.

சிறிய திட்டங்களை பொருத்த அளவில், கோரக்பூரில், என்சிசி பயிற்சி அகாடமிக்கு ₹ 12 கோடி மற்றும் சைனிக் நிறுவனத்திற்கு ₹ 5 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அயோத்தியின் வளர்ச்சி பணிக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர தகவல் மற்றும் விளம்பரம் தொடர்பான பணிகளுக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு தொடர்ச்சியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த முறை பசு பாதுகாப்பு மையங்கள் அமைக்க கூடுதலாக ரூ.10 கோடியும், தெரு மாடுகளை பராமரிக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதற்காக UPSRTCக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications