ஜிஎஸ்டியை தூக்கி எறியுங்கள்... டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்திய ஆர்.எஸ்.எஸ்சின் தொழிலாளர் அமைப்பு!
Recommended Video
டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பால் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவு அமைப்பான மஸ்தூர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில், சமீபத்தில் அந்த அமைப்பின் பேரணி நடைபெற்றது. தொழிலாளர் விரோத கொள்கைகளை பாஜக பின்பற்றுவதாக குற்றம்சாட்டிதான் இந்த பேரணி நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.
ஒரே மாதிரி இல்லை
அப்போது பேசிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரிஜேஷ் உபாத்யாய் கூறுகையில், "அனைத்தும் ஒரே அளவுகோலை கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாாதாரம் அப்படிப்பட்டது கிடையாது. ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு வகையானவை. அதை தனித்தனியாகத்தான் பரிசீலிக்க வேண்டும். ஜிஎஸ்டி நடைமுறையை அரசு அகற்றினால்தான் சிறு தொழில் மற்றும் விவசாயத்துறை வளர்ச்சியடையும்" என்றார்.
பாஜக vs ஆர்எஸ்எஸ்
மஸ்தர் சங்கம் என்பது நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிலாளர் சங்கங்களில் ஒன்றாகும். இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது பாஜகவின் தாய் அமைப்பு என அழைக்கப்படுவது. அப்படியிருந்தும், ஜிஎஸ்டிக்கு எதிராக மஸ்தூர் சங்கம் பேரணி நடத்தியுள்ளது. இது ஆர்எஸ்எஸ் அனுமதியில்லாமல் நடந்திருக்காது என்றே தெரிகிறது.
பாஜகவிற்குள் சலசலப்பு
இதன் மூலம், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிருப்தி இருப்பது தெளிவாகிறது. சுப்பிரமணியன் சுவாமி, யஷ்வந்த் சின்ஹா போன்ற பாஜகவின் முன்னணி தலைவர்களும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பொருளார கொள்கைகளையும், அதற்கு பக்கபலமாக உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசையும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
பட்ஜெட் தாக்கல்
இந்த சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பும் ஜிஎஸ்டிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது பொருளாதார சீர்திருத்தங்கள் விவகாரத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே இந்த பேரணியின் நோக்கமாகும்.
ஆதரவு தேவை
பிரிஜேஷ் உபாத்யாய் மேலும் கூறுகையில், "இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சினை மற்றும் பொருளாதார சரிவுதான் இப்போது மிக முக்கிய பிரச்சினையாகும். சிறு தொழில் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரசு இத்துறைகளுக்கு மானியமும், ஆதரவும் வழங்க வேண்டும்" என்றார்.