உ.பியில் 200 முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றிய ஆர்.எஸ்.எஸ்.!
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மதுநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். இந்து மதத்துக்கு மாறியவர்களின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தர்மா ஜாக்ரான் சம்னவா விபாக் என்ற முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேஸ்வர் சிங் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு மாதமும் ஆயிரம் குடும்பங்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ50 லட்சம் செலவு செய்யப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, பதேபூர்சிக்ரி, மதுரா, மீரட் மற்றும் உத்தர்காண்ட்டில் மொத்தம் 2.73 லட்சம் முஸ்லிம், கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றியுள்ளோம்.
வரும் கிறிஸ்துமஸ் நாளில் அலிகாரில் 5 ஆயிரம் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து மதத்தில் இணைந்த 76 வயதான சுபையா பேஹம் என்பவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 5 முறை குரான் ஓதி தொழுகையில் ஈடுபடுவேன். ஆனால் தற்போது கணேச துதிப் பாடல்களைப் பாடி வணங்குகிறேன். என்னை பொறுத்தவரை இரண்டு மதத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார்.
கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்எஸ் எஸ் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் ஆன் லைன் மூலமாகவும் இணைவோர் அதிகரித்து வருவதாவும் ஆர் எஸ் எஸ். இயக்கத்தினர் கூறியுள்ளனர்.