அதெப்படி எங்களுக்கு விருது தர மோடி மறுக்கலாம்? பஞ்சாயத்தை கூட்டும் ஆர்.எஸ்.எஸ். அறிவியல் அமைப்பு!
மைசூரு: கர்நாடகாவின் மைசூருவில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் தங்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்க மறுத்தது குறித்து பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் அறிவியல் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவியல் அமைப்பாக செயல்படுவது விபா என்கிற விக்யான் பாரதி. இதன் சார்பாக டெல்லி ஐ.ஐ.டி.யில் கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி 2,000 மாணவர்கள் பங்கேற்ற 'செய்முறை அறிவியல்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது கின்னஸ் அமைப்பால் புதிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் அயர்லாந்தில் 1339 மாணவர்கள் பங்கேற்ற செய்முறை அறிவியல் நிகழ்ச்சியே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனைக்காக மைசூருவில் அண்மையில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் விக்யான் பாரதி அமைப்புக்கு விருது வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விக்யான் பாரதிக்கு விருது வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவியல் அமைப்பான விக்யான் பாரதி, அறிவியல் மூலமாக சகோதரத்துவத்தை வளர்ச்சிக்கும் முயற்சிகளுக்கு இது வருத்தமளிக்கும் நடவடிக்கையாகும். இந்த மாணவர்களை டெல்லிக்கு அழைத்து பிரதமர் மோடி கவுரவிப்பார் என எதிர்பார்க்கிறோம் என கொந்தளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடிவாளம் ஆர்.எஸ்.எஸ். கையில் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு எங்கள் கைகளில்தான் என ஆர்.எஸ்.எஸ். இயக்கம், இடஒதுக்கீடு குறித்து விமர்சிக்கப் போய் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் வெளிப்படையான நெருக்கத்தை பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார். இதனாலேயே இந்திய அறிவியல் மாநாட்டிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவியல் பிரிவுக்கு விருது வழங்கினால் அது ஒரு சர்ச்சையாக வெடிக்குமோ என கருதி பிரதமர் மோடி தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனாலும் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.! எந்த நாட்டாமை என்ன தீர்ப்பு தருவார்களோ!












Click it and Unblock the Notifications