சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் வருமானம் இத்தனை கோடியா? மகிழ்ச்சியில் தேவஸ்வம் போர்டு
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிவடைந்து மகர விளக்கு பூஜை தொடங்கியுள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை காரணமாக உண்டியல் வருமான அதிகரித்துள்ளது. இது தேவஸ்வம் போர்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்துவிட்டது. ஜனவரி 14 ம் தேதி மகர விளக்கு தரிசனம் என்பதால் அதற்கான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மகர விளக்கு பூஜைக்கு செல்ல பல ஐயப்ப பக்தர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள். சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.
அதாவது ரூ 82 கோடி அதிகரித்து கிடைத்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்கு கிடைத்த வருமானம் குறித்த விபரத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில் இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 26ஆம் தேதி வரை நடந்தது. இந்த ஆண்டு ஐயப்ப சீசனின் முதல் பாதியான மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் அளித்த காணிக்கையால் ரூ 297 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மண்டல பூஜையின் போது ரூ 215 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. இது வெறும் உண்டியல் வருமானம் மட்டுமில்லை, அரவண பாயாசம், அப்பம் போன்ற பிரசாத பொருட்கள் மூலமாக கோவிலின் வருமானம் அதிகரித்துள்ளது.
சபரிமலையில் இந்த ஆண்டு பிரசாத பொருட்களின் விற்பனை மூலமாக மட்டும் ரூ 22 கோடி கிடைத்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டை விட அதிகம். 41 நாட்கள் நடந்த மண்டல கால பூஜையின் போது 32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 28 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 4 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தற்போது ஐயப்பன் சீசனின் இரண்டாம் பாதி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கியுள்ளது. மிக முக்கியமான நிகழ்வான மகரவிளக்கு தரிசனம், வட இந்தியாவில் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் நாளான ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அத்துடன் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த நாள் 20 ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்று காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இவ்வாறு தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications