சபரிமலை கோயில் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறப்பு: புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றனர்.
திருவனந்தபுரம்: சாமியே சரணம் ஐயப்பா... என்ற சரண கோஷம் விண்ணை எட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்கள் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நடைபெற உள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மாதத்தோறும் மாதப்பிறப்பன்று நடை திறப்பது வழக்கம். உலகம் முழுவதிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்வார்கள்.
கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலம் 48 நாட்கள் நடைபெறும். இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதனையொட்டி நேற்று செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு, தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் பழைய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஐயப்பன் கோயில் நடையை திறந்தார். கோயில் நடை திறப்பை முன்னிட்டு முதல்நாளே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் திரண்டனர். சாமியே சரணம் ஐயப்பா என பக்தர்களின் சரண முழக்கமிட்டனர்.
சங்கரன் நம்பூதிரி 18ம் படி வழியாக கீழே இறங்கிவந்து சன்னிதானத்தில் உள்ள நெய் தேங்காய் எரியூட்டும் ஆழியில் தீ மூட்டினார். இதன் பிறகு புதிய மேல்சாந்திகளான உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
சபரிமலை கோயிலுக்கு உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும், மாளிகைபுரம் கோயிலுக்கு மனுகுமார் நம்பூதிரியும் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்றனர். தந்திரி கண்டரர் ராஜீவரர் கோயில் சன்னிதானத்தில் வைத்து வேதமந்திரம் ஓதி, புதிய மேல்சாந்தி பொறுப்புக்கான சடங்குகளை நடத்தினார். இரவு 10 மணியளவில் ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்பட்டது.
இன்று அதிகாலை 3 மணியளவில் சபரிமலை புதிய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். மனுகுமார் நம்பூதிரி மாளிகைபுரம் கோயில் நடை திறந்தார். இன்று முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த புதிய மேல்சாந்திகள் தலைமையில் தான் சபரிமலை மற்றும் மாளிகைபுரத்தில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.
மண்டலகால பூஜை தொடங்கியதை முன்னிட்டு முதல்நாளே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். மண்டலகால பூஜையையொட்டி இன்று முதல் டிசம்பர் 26ம் தேதி வரை கோயிலில் அதிகாலை 3.30 மணி முதல் பகல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.
டிசம்பர் 26ம் தேதி பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறும். 3 நாள் இடைவெளிக்கு பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். அடுத்த வருடம் ஜனவரி 14ம் தேதி மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.