விளம்பரங்களில் நடிக்கும் சச்சினுக்கு பாரத ரத்னா எதற்கு?, ஹைகோர்ட்டில் வழக்கு!
போபால்: விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வரும் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட, பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டுமென மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விளங்கிய சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,021 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் சேர்த்துள்ளார். கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கடந்த நவம்பரில் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் போபாலை சேர்ந்த வி.கே.நேஸ்வர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், "பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். பாரத ரத்னா விருதுக்குள்ள நற்பெயர் அவர் நடிக்கும் விளம்பரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதினை மத்திய அரசு திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
மேலும், இது பாரத ரத்னா விருதுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கை என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விருது பெற்றவர்கள் விளம்பர படங்களில் நடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
சச்சின், தற்போது, எம்.ஆர்.எப், பூஸ்ட் உள்ளிட்ட 12 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் பல கோடி ரூபாயை சச்சின் வருவாயாக ஈட்டுகிறார்.