பெண் சாமியார் பிரக்யா விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுனில் ஜோஷி கொலை வழக்கு!
டெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து தப்பிய பெண் சாமியார் பிரக்யா, ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர் சுனில் ஜோஷி கொலை வழக்கில் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா மீதான குற்றசாட்டுகளை தேசியப் புலனாய்வு ஏஜென்சி கைவிட்டிருந்த நிலையில் பிரக்யா, சுனில் ஜோஷி கொலை வழக்கில் இருந்து வெளியே வர தொடர்ந்து போராடி வருகிறார். மாலேகான் வழக்கில் இருந்த முக்கியமான சிக்கல்களையும் தடைகளையும் பிரக்யா தாண்டிவிட்டார்.
ஆனால் சுனில் ஜோஷி கொலை வழக்கில் அவர் ஜாமீன் பெற்றால்தான் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியும் என்று அவரது முன்னாள் வழக்கறிஞர் கணேஷ் சோவானி ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியுமான சுனில் ஜோஷி படுகொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது. பெண் துறவி பிரக்யாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதால் ஜோஷி கொலை செய்யப்பட்டார் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சுனில் ஜோஷி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதே தங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்று கூறிய பிரக்யாவின் முன்னாள் வழக்கறிஞர் சோவானி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது என்றார்.