"கோட்சே தேசப்பற்றாளர்" - கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ்
டெல்லி: மகாத்மா காந்தியைப் போல அவரை சுட்டுக் கொலை செய்த கோட்சேவும் தேசப்பற்றாளரே என்ற தமது கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சாக்சி மகாராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊடங்களுக்குப் பேட்டியளித்திருந்த சாக்சி மகாராஜ், மகாத்மா காந்தியைப் போலவே தேசப்பற்றாளர் நாதுராம் கோட்சே. தேசியவாதியாக திகழ்ந்தவர் கோட்சே.. மகாத்மா காந்தியும் நாட்டுக்கு நல்லது செய்துள்ளார் என்று கூறியிருந்தார்.

காந்தியை படுகொலை செய்த கோட்சேவை எப்படி பாஜக எம்.பி புகழாரம் சூட்டலாம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் லோக்சபாவிலும் இந்த பிரச்சனை இன்று எழுப்பப்பட்டது. இதனால் அமளி ஏற்பட்டது.
ராஜ்யசபாவிலும் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். இதனால் இரு சபை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
பின்னர் தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து தனது கருத்தை திரும்பப் பெறுவதாக சாக்சி மகாராஜ் கூறினார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதேபோல் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற உத்தரப்பிரதேச ஆளுநர் ராம்நாயக்கின் பேச்சுக்கும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications