3 வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்க வேண்டாம்- சல்மான் கான் வக்கீல் கோரிக்கை
மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு 3 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்க வேண்டாம் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.
கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் சல்மான்கான்,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை செஷன்ஸ் கோர்ட் இன்று சல்மான் கான் குற்றவாளி என்றும் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தது.
தண்டனை குறித்து பின்னர் இரு தரப்பு வக்கீல்களின் வாதம் நடந்தது. முதலில் வாதிட்ட சல்மான் கானின் வக்கீல் ஷிவடே வாதிடுகையில், சல்மான் கான் பல சமூக சேவைகளைச் செய்துள்ளார். சமுதாய சேவை என்பது அவரது ரத்தத்தில் ஊறியது. இதுவரை ரூ. 47 கோடி வரை சமூக சேவைக்காக அவர் செலவிட்டுள்ளார்.
அவருக்கு இதய நோய் உள்ளது. அவரை சிறையில் அடைத்தால் பல சிகிச்சைகளை அவர் பெற வேண்டியிருக்கும். சிறைக்குள் அதெல்லாம் சாத்தியம் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை தர வேண்டும். அவருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை தர வேண்டாம் என்று வாதிட்டார்.
பின்னர் வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரட், வழக்கின் சீரியஸ்தனத்தை கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும். சல்மான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.












Click it and Unblock the Notifications