அகிலேஷ் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறிய சமாஜ்வாடி வேட்பாளர்!
முதல்வர் அகிலேஷ் பிரசாரத்துக்கு வந்தபோது மேடையிலேயே கதறி அழுதார் சமாஜ்வாடி வேட்பாளர்
தியோரியா: முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரசாரத்துக்கு வந்தபோது மேடையிலேயே சமாஜ்வாடி வேட்பாளர் கதறி அழுத சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் நாளை 6-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தியோரியா மாவட்டம் பர்கஜ் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக பிடி திவாரி போட்டியிடுகிறார். இங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அவருக்கு ஆதரவாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது மேடையில் இருந்த வேட்பாளர் திவாரி திடீரென கதறி அழுதார். கட்சியில் உள்கட்சி பூசல் உள்ளது. நான் தோற்று விடுவேனோ என்று தயங்கியபடி கூறினார். இதைப் பார்த்த கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனே மைக்கை வாங்கிய அகிலேஷ், எல்லா தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பர்கஜ் தொகுதியை எப்படி அவர் எடுப்பார் என்று பார்ப்போம். இங்கு ஜெயிக்கப்போவது திவாரி தான் என்று வேட்பாளருக்கு தைரியமூட்டினார். கூடியிருந்த தொண்டர்களும் கைதட்டி வரவேற்றனர். இதன்பிறகு வேட்பாளர் உற்சாகம் அடைந்தார். போட்டியிடும் வேட்பாளரே பிரசாரத்தின் போது கதறி அழுதது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications