உபி மக்களவை தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்! காங்கிரசுக்கு அதிர்ச்சி
லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதம் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன.

வேட்பாளர் பட்டியல்: இதற்கிடையே உபி மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி இப்போது வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிக வாக்குகளைப் பெற்ற இடங்களின் வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சி: சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. இருப்பினும், உபியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம் என்ற தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. இந்தச் சூழலில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸை நிராகரித்துள்ளனர். இருவரும் தனித்துக் களமிறங்கப் போவதாக அறிவித்துவிட்டனர். மறுபுறம் பீகாரில் நிதிஷ்குமார் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார். நிதிஷ்குமார் பாஜக உடன் மீண்டும் கை கோர்த்து இந்தியா கூட்டணிக்கே மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நெருக்கடி: இந்தச் சூழலில் தான் இப்போது உபியில் அகிலேஷ் யாதவ் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். காங்கிரஸ் சமாஜ்வாதி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் தொடரும் நிலையிலேயே வேட்பாளர் பட்டியலை அறிவித்து அகிலேஷ் யாதவ் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசம்: இந்தியாவிலேயே லோக்சபாவுக்கு அதிகபட்ச லோக்சபா எம்பிக்களை அனுப்பும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் தான் இருக்கிறது. உபி-இல் இருந்து மொத்தம் 80 எம்பி சீட்கள் உள்ளன. அதில் அதிகபட்சம் 11 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க முடியும் என்று அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
கடந்த 2019 தேர்தலில் அகிலேஷ் யாதவும், மாயாவதியின் பகுஜுன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. அதில் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி மற்றும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications