அகிலேஷ் நீக்கம் எதிரொலி.. சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூஹி சிங் ராஜினாமா
சமாஜ்வாடி கட்சி செய்தித்தொடர்பாளர் ஜூஹி சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கப்பட்டதை அடுத்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜூஹி சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது சமாஜ்வாடி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உள்ளார். அம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக மாநில தலைவர் என்ற முறையில் சிவ்பால் யாதவ் வேட்பாளர் பட்டியலை தயாரித்து முலாயமிடம் வழங்கினார். முலாயமும் சிவ்பாலும் ஆலோசித்து 403 தொகுதிகளில் 325 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தனர். மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என முலாயம் சிங் யாதவ் அண்மையில் அறிவித்தார்.
மேலும், 325 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தார் முலாயம் சிங் யாதவ். அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவ் தயாரித்து கொடுத்த அவரது ஆதரவாளர்கள் அடங்கிய பெயர்கள் இடம் பெறவில்லை. மாறாக, அவரது சித்தப்பாவும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஷிவ்பாலின் ஆதரவாளர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால், முலாயம் சிங் யாதவுக்கும் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகியது.
இதையடுத்து தனது ஆதரவாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் தன்னிச்சையாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக சிவ்பால் யாதவும், 78 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனால், குடும்ப சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அகிலேஷ் யாதவ் நடந்து கொண்டதால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு சமாஜ்வாடி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என கட்சித் தலைவர் முலாயம் அதிரடியாக நேற்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜூஹி சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications