மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி? நாளை அறிக்கை தாக்கல்.. சீறிய தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர்! பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் ஷேக் பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகவும், அவரை கைது செய்யக்கூறியும் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி தேசிய பட்டியலின ஆணையம் நேரில் விசாரணை நடத்திய நிலையில் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது தலைப்பு செய்தியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக மேற்குவங்க மாநிலத்தின் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் தான். இவர் மீது ரேஷன் ஊழல் புகார் எழுந்தது. இதையடுத்த கடந்த ஜனவரி 5ம் தேதி அமலா்கத்துறையினர் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த வேளையில் அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை தடுத்த நிறுத்தி தாக்கினர். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஷாஜகான் ஷேக் தலைமறைவானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் ஷாஜகான் ஷேக் மீது பெண்கள் பரபரப்பான புகார்களை முன்வைக்க தொடங்கினர்.
அதாவது ஷாஜகான் ஷேக் அங்கிருப்பவர்களை மிரட்டி நிலத்தை அபகரிப்பதோடு, பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டி தொல்லை கொடுப்பதாகவும் கூறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வேண்டும் என பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஷாஜகானின் கூட்டாளியான ஷிபாபிரசாத் ஹஸ்ராவுக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளை போராட்டக்காரர்கள் எரித்ததால் பதற்றம் அதிகரித்தது.
மேலும் பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்த வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கொல்கத்தா நீதிமன்றம் போட்ட உத்தரவால் 144 தடை உத்தரவு அகற்றப்பட்டது. இந்நிலையில் தான் சந்தேஷ்காலி கிராமத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தால் சந்தேஷ்காலி கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த கிராமத்துக்கு சென்று மாநில மகளிர் ஆணையம், தேசிய பட்டியலின ஆணையத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் தான் தேசிய பட்டியலின ஆணையத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சந்தேஷ்காலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
சந்தேஷ்காலி கிராமத்தில் விசாரணையை முடித்து வரும் நாளை காலை 11 மணிக்கு அந்த ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இதுபற்றி அருண் ஹால்தார் கூறுகையில், ‛‛நாங்கள் சம்பவம் குறித்து அறிந்து விசாரணை நடத்தி உள்ளோம். மக்கள் நிறைய விஷயங்களை எங்களிடம் கூறியுள்ளனர். இன்னும் பலர் எங்களுடன் பேச விரும்புகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். நாங்கள் அரசியல் சார்ந்த அமைப்பு உள்ளது. நாங்கள் அரசியமைப்பின் ஒரு அமைப்பாக இயங்குகிறோம்'' என்றார்.
இதுபற்றி பட்டியலினத்தவர்கள் தேசிய ஆணையத்தின் உறுப்பினரான அஞ்சு பாலா கூறுகையில், ‛‛மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் சம்பவம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி எதையும் கூறாமல் இருக்கிறார். பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மம்தா பானர்ஜி பெண் முதல்வராக இருந்தும், இப்படி அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது. இதனால் இந்த நாடு மம்தா பானர்ஜியை ஒருபோதும் மன்னிக்காது. இதனால் சந்தேஷ்காலி கிராமத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் இருக்காது'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் பட்டியலின தேசிய ஆணையத்தின் உறுப்பினரான அஞ்சு பாலாவின் கருத்து தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேஷ்காலி கிராம வன்முறை தொடர்பாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் ஆக்ரோஷமாக கூறியுள்ளார். இதனால் தான் மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய பட்டியலின உறுப்பினர்கள் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால் சந்தேஷ்காலி வன்முறை சம்பவம் என்பது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications