தெலுங்கானா மாநில தூதராக 'ஹைதராபாதி' சானியா மிர்சா நியமனம்
ஹைதராபாத்: புதிதாக உதயமாகியுள்ள தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, உலக டென்னிஸ் வீராங்கனைகளில் முக்கியமானவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணமுடித்துள்ளார்.

டென்னிசில் சாதனை
சமீபத்தில் இவர் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறி தனது வாழ்நாள் சாதனையை நிகழ்த்தி காண்பித்தார். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து பிரித்து ஹைதராபாத்தை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானாவுக்கு சானியா மிர்சாவை தூதராக நியமித்துள்ளது அம்மாநில அரசு.

வெளிநாட்டிலும் புகழை பரப்ப..
தெலுங்கானாவின் தொழில் உள்கட்டமைப்பு கழக மேலாண் இயக்குநர் ஜெயேஸ் ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "சானியா மிர்சா உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தெலுங்கானா குறித்த கவுரவத்தை உயர்த்தி பிடிப்பார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரூ.1 கோடி கவுரவ பணம்
மாநில தூதராக இருக்க சம்மதித்த சானியாவுக்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். ஹைதராபாத்தில் நடந்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின்போது இந்த காசோலை சானியாவிடம் அளிக்கப்பட்டது.

நிஜ ஹைதராபாதி
சந்திரசேகரராவ் இந்த நிகழ்ச்சியின்போது பேசுகையில் "உண்மையான 'ஹைதராபாதி'யான சானியா மிர்சா நமது மாநில தூதராகியுள்ளது பெருமை அளிக்கிறது. உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு அவர் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்." என்றார்.












Click it and Unblock the Notifications