பிகே படம் பார்க்க நடிகர் சஞ்சய் தத்துக்கு 14 நாட்கள் பரோல்!
மும்பை: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ள "பிகே" படத்தினைக் காண்பதற்காக 14 நாள் பரோலில் வெளியில் வந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின் போது, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு, ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடந்த 2013 மே மாதத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி இடையில் மூன்று மாதம் பரோலில் வந்தார். அவரின் பரோல் நீட்டிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறை செல்வதற்கு முன் அமீர் கான், அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து "பிகே" என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் 14 நாட்கள் பரோலில் வெளியில் வந்துள்ளார். மேலும், இந்த பரோலானது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.