சாரதா நிதி நிறுவன மோசடி: திரிணாமுல் பொதுச்செயலர் முகுல் ராயிடம் சி.பி.ஐ. 5 மணிநேர விசாரணை!
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 5 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த வழக்கு பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள், மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் ராய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதையடுத்து இம்மாதம் 30-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதாக முகுல் ராய் உறுதியளித்திருந்தார்.
இதன்படி கொல்கத்தாவிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 மணிநேரம் முகுல் ராயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முகுல் ராய், இந்த வழக்கில், உண்மை வெளிவர வேண்டும் என்பதே என் விருப்பம். சி.பி.ஐ. தரப்பில் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை விசாரணைக்கு அழைக்கலாம். நான் ஒத்துழைப்பு தருவேன் என்றார்.
இதனிடையே சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக முகுல் ராயிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications