சாரதா சிட் பண்ட் மோசடி- 'அறிவித்தபடி' திரிணாமுல் எம்.பி. குணால் கோஷ் தற்கொலை முயற்சி!
கொல்கத்தா: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள, சஸ்பென்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. குணால் கோஷ் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களை மோசடி செய்து பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டது என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் பல அரசியல் பிரபலங்கள், காவல்துறை அதிகாரிகள் கைதாகி உள்ளனர். இவர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ் எம்.பி.யும் ஒருவர். சாரதா வழக்கில் கைதானால் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது.
கொல்கத்தா சிறையில் உள்ள அவர் கடந்த திங்கள்கிழமையன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த வழக்கில் பல உண்மைக் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களையும் 3 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை கொல்கத்தா சிறையில் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்டு சிறைத் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாம் அறிவித்தபடி சிறையில் குணால் கோஷ் தற்கொலை செய்ய முயற்சித்திருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க அமைச்சர் பிர்காத் ஹக்கீம், இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நோயாளிகளுக்கு பழங்களை மட்டுமே வழங்க வந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications