ஆசிய மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ்!
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லி: அமிர்தசரஸில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்தாஜ் அசிஸின் இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறாமல் போனதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருந்தது.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி அமிர்தசரஸில் நடைபெறவுள்ள ஹார்ட் ஆப் ஏசியன் கான்பிரன்சில் பங்கேற்க இருப்பதாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிடம் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தாம் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தியாவின் பதிலடியில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலியானபோதும் இம் மாநாட்டை தவிர்க்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். கடந்த செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யுரியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் உயிர் நீத்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா வருகை தரும் முதல் பாகிஸ்தானிய மூத்த அதிகாரி சர்தாஜ் அசிஸ் ஆவார்.