பத்துக்கு எட்டு சைஸ் அறை.. தரையில்தான் உறக்கம்.. பக்கத்திலேயே கொலைகாரி.. சசிகலாவின் நிலை இதுதான்
சிறையில் முதல் தளத்திலுள்ள, எட்டுக்கு பத்து என்ற அளவிலான அறைதான் இளவரசி, சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கட்டிலோ, பெட்டோ கிடையாது.
பெங்களூர்: சசிகலா மற்றும் இளவரசி இருவரும் பெங்களூர் சிறையில் தரையில்தான் படுத்து இரவு பொழுதை கழித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக முதல்வர் பதவிக்கு வர பேராசைப்பட்டவர் சசிகலா. ஆனால் அவரை காலம் கட்டில் கூட இல்லாமல் சிறையில் படுக்க வைத்துள்ளது.
ஆம்.. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவும், அவரது அண்ணியார் இளவரசியும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

சப்பாத்தி சாப்பிட்டார்
இரவு அவர்களுக்கு சப்பாத்தி, களி, சாம்பார் கொடுக்கப்பட்டது. இது சிறையில் எல்லோருக்கும் வழங்கப்படும் சாப்பாடுதான். மற்றபடி இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. சிறையில் அணியக்கூடிய வெள்ளை நிறத்தில் நீல நிற பார்டர் போட்ட சேலை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பெட் கிடையாது
சிறையில் முதல் தளத்திலுள்ள, எட்டுக்கு பத்து என்ற அளவிலான அறைதான் இளவரசி, சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கட்டிலோ, பெட்டோ கிடையாது. கீழே விரித்துக்கொள்ள போர்வையும், உடலை மூட கம்பளியும் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் குளிர் சீதோஷண நிலையில், இருவருமே கீழேதான் படுத்துள்ளனர். டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே பெட் கொடுக்கப்படுமாம்.

கொலை குற்றவாளி
இவர்கள் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகேயுள்ள அறைகளில் கொலை குற்றவாளி, ஏமாற்று வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி பெண்களும் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு செய்தித்தாள் வாசிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

விருப்பம்
நீதிமன்றம் இவ்விருவருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கவில்லை. எனவே கண்டிப்பாக சிறைக்குள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், மெழுகுவர்த்தி செய்வது, எம்பிராய்டரி, தையல் பணிகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அவர்கள் விருப்பத்தின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

சலுகையில்லை
இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ் கூறுகையில், சசிகலாவும், இளவரசியும் பிற கைதிகளை போலவே நடத்தப்படுவார்கள். அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் எதுவும் சிறைக்குள் தரப்படாது என்றார். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிமன்றம் கருணை காட்டினால் மட்டுமே சசிகலா விரும்பிய பிற சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.












Click it and Unblock the Notifications