ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடக் கூடாது- தினகரனுடன் பெங்களூரு சிறையில் சசிகலா கடும் வாக்குவாதம்!
ஆர்.கே.நகரில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சசிகலா கூறியதை தினகரன் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பெங்களூரு: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிடக் கூடாது என பெங்களூரு சிறையில் சசிகலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் சசிகலாவை மீறி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என சபதம் போட்டுவிட்டு திரும்பியிருக்கிறாராம் தினகரன்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் அவரது சொந்தங்கள் அரசியலில் தலையெடுக்க மாட்டார்கள் என டெல்லி நினைத்தது. ஆனால் தினகரன் தடாலடி காட்டினார்.
இதனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் சிறைக்குப் போக நேரிட்டது. சிறையில் இருந்து தினகரன் வந்த போது அதிமுக எடப்பாடியார் வசம் போனது.
டெல்லி கோபம்
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆனாலும் தினகரன் சவுண்டு கொடுத்து வந்தது டெல்லியை கடுப்பேற்றியது. இதன்பின்னர் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பமே வருமான வரித்துறையில் சிக்கியது.
ஆர்கே நகர் தேர்தல்
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடுவேன் என தினகரன் அடம்பிடிக்கிறார்.
சசிகலாவுடன் ஆலோசனை
ஆனால் நடராஜன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதனால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்தார். அந்த சந்திப்பின் போதும் தினகரனை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றே சசிகலா சொல்லியிருக்கிறார்.
சசியை மீறி போட்டி
இதை ஏற்க மறுத்த தினகரன், சசிகலாவுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தமக்கு செல்வாக்கு இருக்கிறது; அதை தேர்தலில் நிரூபிப்பேன்; இப்போது போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் ஓடிவிடுவார்கள் என உரத்த குரலில் வாதிட்டிருக்கிறார். ஆனாலும் சசிகலா ஏற்கவில்லையாம். சசிகலா விரும்பாத நிலையிலும் தினகரன் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.