ஜெ.மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி மோடியை சந்திக்கிறார் சசிகலா புஷ்பா
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி மோடியை இன்று சந்திக்கிறார் சசிகலா புஷ்பா.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இன்று பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது. இருப்பினும் அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு விடைதெரியாமல் உள்ளது.
இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் ஏற்கனவே அவர் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு அளிக்க உள்ளார் சசிகலா புஷ்பா..