சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்!
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் கடந்த மே 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். இதை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றது.

சீராய்வு மனு என்ன?
ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து தங்கள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதிகளின் அறையிலேயே விசாரணை நடத்தப்படும். ஆனால் இந்த சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதிகள் விசாரணை
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமிதவ் ராய் மற்றும் ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரோஹிண்டன் நாரிமனின் தந்தை பாலி நாரிமன் (காவிரி வழக்கில் கர்நாடகாவிற்காக ஆஜராகிறார்) ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா-சசிகலா தரப்புக்காக ஆஜரானவர்.

நேற்று விசாரணை
இதனால் ரோஹிண்டன் பாலி நாரிமன், இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். ஆதலால் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

மனு தள்ளுபடி
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அமிதவா ராய், சரத் அரவிந்த் போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. தீர்ப்பிலும் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மறு சீராய்வு மனுக்கும் வழியில்லை
இதனால் சசிகலா தரப்பு ஏமாற்றமடைந்தது. குற்றவியல் வழக்குகளில் மறுசீராய்வு மனு என்பது மனுதாரருக்கு ஆதரவான முடிவை தராது என்று சட்ட வல்லுநர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications