நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்.. 10 நாட்கள் பரோலில் வருகிறார் சசிகலா
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் அவரை காண 10 நாள்கள் பரோல் கேட்க சசிகலா முடிவு செய்துள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன.
பெங்களூர்: பல்லுறுப்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை சந்திக்க 10 நாள்கள் பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்ததை அடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உறுப்பு தான மையத்தில் கல்லீரலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டயாலிசிஸ் சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.
அவரை சந்திக்க சசிகலா பரோல் கேட்கக் கூடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நடராஜனின் நிலை மோசமாக உள்ளது. கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விடுமுறை காலம் என்பதால் விடுமுறை முடிந்து வரும் 5- ம் தேதியில் இருந்து 10 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை மனுவை அவர் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தகவலை உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications