கேரளா ஆளுநர் சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராகிறார்?
டெல்லி: கேரளா ஆளுநரும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தற்போது கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் கேரளா ஆளுநருமான சதாசிவம், மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் டெல்லியில் தொடர்ந்து சட்டம் தொடர்பான உயர் பதவியில் பணியாற்ற விரும்பினார்.
ஆனால் அந்த சமயத்தில் டெல்லியில் அவரது சிறப்புக்குரிய உயர் பதவி எதுவும் காலியாக இல்லாமல் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சதாசிவம் கேரள மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாவதால், அந்த இடத்தில் சதாசிவத்தை நியமனம் செய்ய மத்திய அரசு முன் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சதாசிவம் நியமிக்கப்பட்டால் 2020-ம் ஆண்டு வரை 5 ஆண்டுக்கு பதவியில் இருப்பார்.












Click it and Unblock the Notifications