சர்ச்சைகளுக்கு நடுவேயும், கேரள ஆளுநராக பொறுப்பேற்றார் சதாசிவம்
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பதவியேற்றுக்கொண்டார்.
கேரள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித், கடந்த மாதம் 26ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தமிழகத்தை சேர்ந்தவருமான பி.சதாசிவத்தை கேரள மாநில கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால் பி.சதாசிவம் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எதிர்ப்புக்கு மத்தியிலும், நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமிக்கப்படுவதாக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, கேரள மாநில 23வது ஆளுநராக சதாசிவம் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கேரள உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதிஅசோக் பூஷன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள், ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன், கேரள சபாநாயகர் ஜி.கார்த்திக்கேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த நீதிபதி பி.சதாசிவம், கடந்த ஏப்ரல் மாதம் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே இவரை ஆளுநர் பதவிக்கு நியமிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி கூறிவந்தது. சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமிக்க உள்நோக்கம் உள்ளதா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இருப்பினும், ஆளுநர் நியமன விஷயத்தில் மத்திய அரசும், சதாசிவமும் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே, சர்ச்சைகளுக்கு நடுவே சதாசிவம் இன்று ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
மாநில ஆளுநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலாவது, முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் ஆவார். மேலும் மோடி அரசால் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ள, அரசியல் கட்சியை சாராத முதல் ஆளுநர், இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications