சல்மான்கான் விடுதலைக்கு எதிரான அப்பீல் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. 4 வருடம் கழித்தே விசாரணை
டெல்லி: ரோட்டோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. அதேநேரம், 4 வருடங்கள் கழித்துதான் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2002 செப்டம்பர் 28ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் சல்மான் ஓட்டி சென்ற கார், பேக்கரி அருகே வெளியே படுத்திருந்த நபர் மீது ஏறியதில் அவர் இறந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்த வழக்கில் சல்மான்கானை, விடுதலை செய்து பாம்பே ஹைகோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர் மற்றும் அருண் மிஷ்ரா அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதேநேரம், அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மகாராஷ்டிர அட்வகேட் ஜெனரல் முகுல் ரோத்கியின் கோரிக்கையை நிராகரித்தது.
மகாராஷ்டிர அரசின் கோரிக்கைக்கு சல்மான் கான் வழக்கறிஞரான, கபில் சிபலும் ஒப்புதல் வழங்கினார். சல்மான் இந்த வழக்கை சீக்கிரம் நடத்தவே விரும்புவதாக கபில் சிபல் கூறினார். ஆனால் நீதிபதிகளோ, இதேபோல நிறைய முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை சுட்டி காட்டினர்.
4 வருடங்களுக்கு பிறகே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று நீதிபதிகள் கூறினர். 6 மாதங்கள் கழித்தாவது வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.