ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: கர்நாடகா ஹைகோர்ட்டில் அனுமதி பெற சு.சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்!
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது வாதாட கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று இந்த வழக்கில் ஆஜராகி வாதாட முதலாவது புகார் தாரர் என்ற அடிப்படையில் அனுமதி கோரினார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் இதை நிராகரித்தார் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி.
மேலும் உச்சநீதிமன்றம் வாதிடலாம் என்று தமக்கு அனுமதி அளித்திருக்கிறது என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். அப்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நகல்களைத் தாக்கல் செய்யுமாறும் நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் வாதாட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சுவாமி இன்று மனுத் தாக்கல் செய்தார். இம் மனுவை தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், மேல்முறையீட்டு வழக்கில் வாதாட கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையான அனுமதி பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.