கடனை வாங்கி விட்டு தப்பியோடும் தொழிலதிபர்கள்... அவசர வழக்கை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் தொழிலதிபர்கள் நாட்டை விட்டு தப்பியோடுவது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாணைக்கு ஏற்றது.
Recommended Video
டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் தொழிலதிபர்களோ கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பியோடுவது தொடர்பான பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாணைக்கு ஏற்றது.
வழக்கறிஞர் விநீத் தண்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அவசர வழக்காக தாக்கல் செய்தார். அதில் விவசாயக்கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 11,500 கோடி கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர் நீரவ் மோடி நாடு தப்பிய நிலையில், அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டு வருவது பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்களின் உரிமைகள் காக்கப்பட இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். நாடு முழுவதிலும் வங்கிகளிடம் விவசாயக் கடன்களை வாங்கிய விவசாயிகள் அவற்றை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதையும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
நீரவ் மோடி தப்பியோட்டம்
பிஎன்பி மோசடியில் தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவருடைய உறவினர் மேகுல் சௌக்சி நீண்ட காலமாக இந்த மோசடியை செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் வெளிவரும் முன்னர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார் என்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணங்கள் பல
நீரவ் மோடி மட்டுமல்ல இதற்கு முன்னர் விஜய் மல்லையா, கேடன் பரேக் மற்றும் ஹர்ஷத் மேத்தா என பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. இவர்களின் மோசடி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணை இல்லாமல் நடந்திருக்காது.
இந்தியா அழைத்து வர வேண்டும்
இந்த பொதுநல மனுவில் நிதியமைச்சகம், சட்டத்துறை, ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றையும் மனுதாரர் சேர்த்துள்ளார். தப்பியோடிய நீரவ் மோடியை இரண்டு மாதத்தில் நாட்டிற்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தண்டா கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய வழிமுறைகள்
அவரிடம் இருந்து பணத்தை மீட்க வேண்டும் என்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பிஎன்பி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் அதிக தொகையை கடனாக அளிப்பதற்கான புதிய வழிமுறைகளையும், அவற்றை மீட்பதற்கு கடுமையான நடைமுறைகளையும் செயல்படுத்த வேண்டும் என்றும் தண்டா கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் ஏற்றது
வழக்கறிஞர் தண்டாவின் இந்த பொது நல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை இந்த அவசர மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.