லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம்கோர்ட் "எச்சரிக்கை" உத்தரவு
டெல்லி: லோதா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பிக்ஸிங் புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

சிஎஸ்கேவுக்கு தடை
அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. பிசிசிஐ அமைப்பிலும், அதன் செயல்பாட்டிலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்கும்படி லோதா குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

லோதா கமிட்டி
இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ரவீந்திரன் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. லோதா தலைமையிலான குழு, பிசிசிஐயின் விதிகளை ஆராய்ந்து கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் 159 பக்க பரிந்துரையை அளித்தது.

பரிந்துரைகள்
அதில், பிசிசிஐ நிர்வாகிகளுக்கு 3 ஆண்டுகால பதவி மட்டுமே வழங்கப்பட வேண்டும். பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பவர்கள் 3 ஆண்டுகள் கொண்ட பதவிக்காலத்தில் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நிர்வாகிகள் 3 ஆண்டுகால பதவியை 3 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது. பிசிசிஐக்கு ஒரு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர் பிசிசிஐயின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவேண்டும். பிசிசிஐயின் தேர்தல்களுக்கு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது.

எச்சரிக்கை உத்தரவு
இதனை முழுமையாக செயல்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்து உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் வாரியம் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், லோதா குழுவின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுமையாக செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக 4 வாரத்துக்குள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும். லோதா குழுவின் பரிந்துரைகளை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுமையாக செயல்படுத்தவில்லை எனில் நீதிபதிகள் குழுவை உச்சநீதிமன்றமே நியமித்து செயல்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications