ஆன்மீகப்படி ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தனுமா?- ஐயப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி
டெல்லி: ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என ஆன்மீகம் சொல்லுகிறதா? என்று ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கில் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணையின் தொடக்கத்தில் இருந்தே ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? என்பதே நீதிபதிகளின் கேள்வியாக இருந்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போதும், சனாதான தர்மப்படி ஆண், பெண் அனைவரும் சமம். வேதங்களும் சாத்திரங்களும் பெண்களை ஒதுக்கி வைக்கலையே.. பிறகெப்படி சபரிமலையில் மட்டும் அனுமதிக்காம இருக்க முடியும்?
ஆண்களைத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று ஆன்மீகம் சொல்லுகிறதா?
பெண்களுக்கான உரிமையை அரசியல் சட்டத்துக்குட்பட்டு ஆய்வு செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை ஆலோசகராகவும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. அதேபோல் சபரிமலையில் பெண்கள் எப்போது முதல் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கான விளக்க ஆதாரங்களை 6 வார காலத்துக்குள் தாக்கல் செய்யவும் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications