ஜல்லிக்கட்டு: ரித்தீஷ் உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனு மீது 21ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா ஆகியவை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மே 7ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2015ம் ஆண்டு பொங்கல் திருநாளின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி முப்பிலிசாமி கோவில் சார்பில் அறங்காவலர் பி.ராஜசேகரன், தமிழ்நாடு பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டு வண்டி காளைகள் மாநில நலச்சங்கம் மற்றும் தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜே.கே.ரித்திஷ் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மறு ஆய்வு மனுக்கள் நீதிபதிகள் வி.கோபால கெளடா மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை ஓபன் கோர்ட் எனப்படும் திறந்த நீதிமன்ற அமர்வில் நடைபெறாமல், நீதிபதியின் அறையில் நடைபெறும். இந்த விசாரணையின்போது வழக்கறிஞர்களோ அல்லது மனுதாரர்களோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விசாரணை முடிந்து அன்று மாலை அல்லது மறுநாள் நீதிமன்றப் பதிவாளர் நீதிபதிகளின் முடிவை வெளியிடுவார்.
பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் தமிழக அரசின் மனு
இதேபோல ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் மறுஆய்வு மனு ஒன்று கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது எப்போது விசாரணைக்கு வரும் என்றே தெரியவில்லை.












Click it and Unblock the Notifications