சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி சசிகலா, இளவரசு, சுதாகாரன் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்து நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தங்களுக்கு சிறை தண்டனையை உறுதி செய்து அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி பினாகி சந்திரகோஷ் ஓய்வு பெற்றுவிட்டதால் நீதிபதிகள் அமித்வராய், நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த சீராய்வு மனுவை விசாரிக்கிறது.